விருது

ஜூன் 3, 2008

நூல் தேர்வு 1 – “சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுகிறேன்”

கோப்பு வகை: Uncategorized — ஜயராமன் @ 7:58 மு.பகல்

நான் படிக்க வேண்டும் என்று தெரிந்தெடுக்கும் புத்தகங்களை இந்த தொடரில் குறிப்பிடலாம் என்று நினைத்து இதை ஆரம்பிக்கிறேன்.

“சொன்னால் விரோதம் ஆயினும் சொல்லுகிறேன்” என்ற புத்தகத்தின் மதிப்புரை தினமலர் 1-6-2008 இதழில் வெளியாகியுள்ளது.

அந்த மதிப்புரையில் என்னை ஈர்த்த பொருள்களை இங்கே எழுதுகிறேன்.

இந்த புத்தகத்தை எழுதியவர் சாமி.தியாகராசன்.  இவர் குன்றக்குடி அடிகளாரின் மாணவராம்.  இந்த நூலுக்கான அறிமுகம் இதோ.

சைவ சமய உலகில் காலங்காலமாகக் காப்பாற்றப்பட்டு வந்த நம்பிக்கை மரபுகளை சில போலிப் புரட்சியாளர்கள் உடைத்தெறிந்து, ஊர் முழுவதும் வெற்றி ஊர்வலம் நடத்தி வருகின்றனர்.  இவர்களைத்தடுத்து நிறுத்தி அவர்கள் போலியானவர்கள், ஆழ்ந்த அறிவோ, பரந்த குணமோ இல்லாத விளம்பர வீரர்கள் என்பதைத் தக்க சான்றுகளுடன் தோலுரித்துக் காட்டும் சமயக் காவல் நூல் இது.

(தினமலர் நூல் மதிப்புரையில் மா.கி. இரமணன்)

இந் நூலில் இடம் பெற்றுள்ள பல கேள்விகளும் அதற்கான விடைகளும்.   ஒரு கேள்வி பதில் இதோ.

கேள்வி:  தமிழில் திருமணத்தை நடத்தி வைக்கும் இன்றைய “தமிழ் புரோகிதரர்கள்” திருஞானசம்பந்தரின் “மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்” என்ற தேவாரத்தையே பாடி நடத்துகின்றனரே இது சரியா?

பதில் :  மரணமுற்ற பின் மறுஉலகில் நல்ல கதியுடம் வாழ்க என்னும் கருத்தமைந்த “மண்ணில் நல்ல வண்ணம்” என்ற சம்பந்தர் தேவாரம் பாடி, இன்று தாலி கட்டச் செய்வது எந்த அளவு தமிழ் புரோகிதர்களின் அவல நிலை என்பதை ஆதாரத்துடன் இந்த நூல் விளக்கும்.

காசியில் சிவலிங்கத்தை நாமே தொட்டு மலரிட்டு மஞ்சனம் ஆட்டுவதை யாவரும் போற்றும் வகையில் இங்கு திருப்பனந்தாள் ஆதீன கர்த்தர் தற்போது மதுரையில் செய்துள்ளார் என்பதை இந்த மதிப்புரையில் தெரிந்துகொண்டேன்.  இது வரவேற்கதக்க முயற்சி.

இந்த நூலில் நமக்கு கிடைக்கும் விளக்கங்கள் கீழ்க்கண்ட மாதிரியானவை:

- வடமொழியா,  தமிழ் மொழியா – சிவபெருமான் பேசிய மொழி என்ன?

- இறைவனுக்கு மிகவும் பிடித்தது வடமொழி அர்ச்சனையா தமிழ்மொழி பூசனையா?

- கண்ணப்பரின் அன்புக்கு காளத்திநாதர் அருள் கொடுத்தார்.   ஆனால், சிவகோசரியாரின் ஆகம பூசையை கண்டுகொள்ளாமல் ஏன் வெறுத்தார்?

-  ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற வடமொழி நான்கு வேதங்கள் போல, தமிழிலும் நான்மறை இருந்ததா?  அது கடல்கோளால் அழிந்ததா?

மேற்சொன்ன கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியாது.    ஆனால், இந்த புத்தகத்தில் பதில் இருப்பதாக அறிகிறேன்.  படித்துவிட்டு வந்து அது பற்றி விமர்சனமோ இல்லை விளக்கமோ தருகிறேன்.

இந்த புத்தகத்தை வெளியிட்டவர்கள் :  தெய்வச் சேக்கிழார் மன்றம், கும்பகோணம் -  612001.  புத்தகத்தின் விலை ரூ.50  பக்கம்-217.

இந்த புத்தகம் சென்னையில் எங்கே கிடைக்கும் என்று தெரியவில்லை.   எல்லா புது புத்தகங்களுக்கும் நான் உடனே நாடுவது எனிஇந்தியன் கடையைத்தான்.   அவர்கள் இந்த புத்தகத்தை வரவழைத்து தருவதாக உறுதி அளித்துள்ளார்கள்.

 சொன்னால் விரோதம்....  மதிப்புரை

நீங்கள் இந்த மதிப்புரையை முழுதுமாக படிக்க இங்கே இணைத்துள்ள படத்தை பார்க்கவும்

 

 

 

1 மறுமொழி »

  1. நான் இந்தப்புத்தகத்தை நேற்றுத்தான் படித்தேன். நான் கல்லூரியில் பயிலும்போது இன்றைய தருமை ஆதீனத்தலைவர் அவர்கள் கோவையில் இருந்தார். அவருக்குத் திருநாவுக்கரசர் மீதிருந்த பத்தியும் அவfஉடைய சைவ ஆசாரமும் அறிவேன். அவரைக் குறித்துத் ‘தமிழ்ப்புரோகிதர்கள்’ பரப்பிய கருத்துக்கள் மீது எனக்கு எழுந்த ஐயங்களை இந்தநூல் அறவே போக்கியது. திருமுறை ஓதும் ஆவலினால் நான் தமிழ்வேள்விகளில் கலந்து கொண்டதுண்டு. இறைவனுக்கு அமுதூட்டும்போது “ஆலந்தான் உகந்து அமுது செய்தானை” எனும் ஆரூரரின் திருப்பாடலை ஓதக் கூறினர். என்னுள்ளத்தில் “ஆலத்தையே உண்டாய்; இதனை உண்ணக்கூடாதா” எனக் கேட்கும் பாவனையே உண்டாயது. இதுபோல் கிரியைக்குப் பொருந்தாத பல திருமுறைப்பாடல்கள் தமிழ்வேள்வியில் பயன்படுத்தப்படுகின்றன.

    திருமணம் முதலாய எந்த நிகழ்ச்சியிலும் திருமுறைகள் ஓதி சிவபரம்பொருளை வழிபட்டு நடத்துவதை யாரும் விரும்பவே செய்வர். பார்ப்பனப் புரோகிதர்கள் செய்யும் சடங்குகளைத் தாங்களும் மேற்கொண்டு அதறுச் சற்றும் பொருந்தாத திருமுறைப்பாடல்களைச் சடங்கு மந்திரங்களாகக் கூறுவது எத்தகைய பிழை என இந்நூல் நன்கு எடுத்துக் காட்டுகின்றது.
    நம: ஆர்ந்த கவுளுடைய நாமார்ச்சனத்திற்கும் நாமமந்திர செபத்திற்கும் சத்திபீசமணைந்த மந்திர செபத்திற்கும் பிறமந்திரங்கட்கும் அக்னியை முன்னிட்டுச் செய்யும் உத்தர கிரியைக்கும் வடமொழியே முக்கியவுதவியாகவும், ஈசனுடைய திருச்செவி திருவுள்ளங்களை யினிது மகிழ்விக்குமாறு இன்னோசையும் உருக்கமும் இயன்றவளவை பிறங்கப் பாடற்கும் பொருளறிதற்குந் தென்மொழியே முக்கிய வுதவியாகவு மிருத்தலின் இவ்விருதிறமுந் தமிழர் கொண்டுய்பவரேயாவர்” பாம்பன் சுவாமிகளின் இந்த கருத்தைச் சைவர்கள் கைக்கொண்டொழுகினால் சைவம் உய்யும்.

    Comment by கோ.ந.முத்துக்குமாரசுவாமி — ஜனவரி 31, 2009 @ 12:21 பிற்பகல் | பதில்


மிஎதொ இப்பதிவிற்கான மறுமொழி ஓடை வரு தொடுப்பு URI

மறுமொழியவும்

வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.